தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முதலில், மார்க்கண்டேயன் தரப்பில் தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் மார்க்கண்டேயன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதன் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து 30ஆம் தேதி விசாரணை தொடர்ந்தது. இந்த விசாரணையின் போது, மார்க்கண்டேயன் தரப்பில், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டிய அவசியம் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில், அதே கோரிக்கையை மாவட்ட நீதிமன்றத்தில் பரிசீலிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சுபா தேவி, மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பிலும் ஜாமீன் வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இளந்திரையன், மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதுபோல் இனி பேசப்போவதில்லை என மார்க்கண்டேயன் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும், தினமும் தூத்துக்குடி காவல் நிலையம் முன் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு திமுக வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
