டெல்டா விவசாயிகளின் போராட்டங்களிலிருந்து தப்பிக்கவே, அவசர அவசரமாக தொகுதி மறுவரையறை நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றுவதாக திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், "பாஜகவை எதிர்த்துப் பேசப் பயந்து, கடந்த ஆண்டு திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தமுறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தவர் இந்த விஜய். ஆனால், தொகுதி மறுவரையறை ஆபத்தை முதலில் எதிர்த்து, மாநாடுகள் நடத்தி, நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவைத் தோற்கடித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை, தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றம் செய்யக்கூடாது என்று ஏற்கனவே ஒருமனதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், இப்போது எம்.பி.க்கள் கூட்டத்திற்கான தேவை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியிடம் தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துவிட்டு, டெல்டா விவசாயிகளின் போராட்டங்களிலிருந்து தப்பிக்கவே இந்த அவசரத் தொகுதி மறுவரையறை நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றுவதாக திமுக ஐடி விங் தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்றும், சட்டமன்றத் தீர்மானத்தை நமது எம்.பி.க்களுடன் சென்று மத்திய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்க தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் தயாரா என்றும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
விவசாயிகளின் உரிமைகளை விற்றுவிட்டு, தவெக அரசு நடத்தும் எந்தவொரு கபட நாடகத்திலும் திமுக பங்கேற்காது என்றும், தமிழ்நாட்டின் நலனில் தங்களுக்குள்ள நிலைப்பாட்டில் எள்ளளவும் மாற்றமில்லை என்றும் திமுக ஐடி விங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
