தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக தலைமை அமைத்த 'கள ஆய்வுக்குழு', தனது விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், சென்னை மண்டலத்தின் முக்கியப் புள்ளியும், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சேகர்பாபு அமைச்சராக இருந்தபோது எடுத்த சில ஒருதலைப்பட்சமான முடிவுகள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி, தேர்தல் தோல்விக்கு வழிவகுத்ததாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, அறநிலையத்துறை அமைச்சராக அவர் பொறுப்பு வகித்தபோது, கோயில்களில் நியமன பொறுப்புகளில் பாரபட்சம் காட்டப்பட்டதாகவும், பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்தவர்களுக்குப் பதிலாக, அதிமுகவிலிருந்து விலகி வந்தவர்களுக்கும், தனக்கு வேண்டியவர்களுக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அதிருப்தி, தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு எதிரான உள் வேலைகளாக மாறி, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக கள ஆய்வுக்குழு தனது அறிக்கையில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. மேலும், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்விக்கு சேகர்பாபு முறையாகப் பணியாற்றாததே காரணம் என்றும், பெயரளவில் மட்டுமே தேர்தல் பணிகளைச் செய்ததாலேயே ஸ்டாலின் தோல்வியடைந்ததாகவும் திமுகவினரே விமர்சிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கள ஆய்வுக்குழுவின் இந்த அறிக்கையால் திமுக தலைவர் ஸ்டாலின் உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விரைவில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.