நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த சூழலில், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பைசன்' திரைப்படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா ஆகியோர் ஜோடியாக நடித்தனர். படப்பிடிப்பு தளத்தில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், அது காதலாக மலர்ந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறின.
இந்நிலையில், இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டுவிட்டதாக திடீரென தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளன. இந்த வதந்திகளுக்கு மத்தியில், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த பதிவில், 'இறுதியில் என் மன அமைதியைக் கண்டறிய, சில முடிந்துபோன பாதைகளிலிருந்து நான் வெளியேற வேண்டியிருந்தது. இனி என் குரலையும், என் வாழ்க்கையையும் நானே தேர்ந்தெடுக்கிறேன். யாருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை. எந்த பயமும் இல்லை. என்னை நான் மீண்டும் கண்டுபிடித்து, என் வாழ்க்கையை மீண்டும் நேசிக்கத் தொடங்கியிருக்கிறேன்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'நான் மிக நீண்ட காலமாகச் சொல்ல விரும்பிய ஒன்று இருக்கிறது… மிக நீண்ட காலமாகச் சொல்ல அனுமதிக்கப்படாத ஒன்று. உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். எனக்குத் துணையாக நின்றதற்கும், என் மீது நம்பிக்கை வைத்ததற்கும், என் வாழ்க்கையை இவ்வளவு அன்பால் நிரப்பியதற்கும் நன்றி. ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு பிரார்த்தனையும், ஒவ்வொரு துளி கருணையும் எனக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் என்னை வந்தடைந்தது' என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
'பிரபஞ்சமே, என்னை மீண்டும் எனக்குள் வழிநடத்தியதற்கு நன்றி. குணமடைவதற்கு வாழ்த்துக்கள். சுதந்திரத்திற்கு வாழ்த்துக்கள். என்னை நானே தேர்ந்தெடுப்பதற்கு வாழ்த்துக்கள். இறுதியாக, முழுமையாக, தயக்கமின்றி என்னுடையதாக இருக்கும் ஒரு வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்' என தனது பதிவை நிறைவு செய்துள்ளார் அனுபமா.
இந்த இன்ஸ்டாகிராம் பதிவு, துருவ் உடனான காதல் முறிவு குறித்த வதந்திகளுக்கு அவர் மறைமுகமாக பதிலளிப்பதாகவே பலரும் கருதுகின்றனர். அனுபமாவின் இந்த மனம்திறந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

