சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, எம்.எஸ். தோனிக்கு அணியில் ஒரு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎஸ்கே வட்டாரங்களின்படி, 2027 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரமும் தோனியிடமே ஒப்படைக்கப்பட உள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 45 வயதாகும் தோனி, இனி ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், ஸ்டீபன் பிளெமிங்கிற்குப் பதிலாக புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்தப் புதிய பயிற்சியாளரின் தேர்வு முடிந்தவுடன், தோனி சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தனது பணிகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது லண்டனில் உள்ள தோனி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 'தி ஹண்ட்ரட்' தொடருக்காக முகாமிட்டுள்ள சில பயிற்சியாளர்களை தோனி சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்ற தகவலும் பரவலாக உள்ளது.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானி, சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் பல்வேறு டி20 லீக் தொடர்களில் பயிற்சியாளராக இருந்து பல கோப்பைகளைக் வென்று கொடுத்துள்ளார். இருப்பினும், அவரது பயிற்சியின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருவதால், அவரை பயிற்சியாளராக நியமிக்கக் கூடாது என சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரம் தோனி வசம் அளிக்கப்பட்டால், அவர் யாரைத் தேர்ந்தெடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. சிலர் ராகுல் டிராவிட் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக வரக்கூடும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னர் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு அவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை. எனவே, அவர் சிஎஸ்கே அணிக்கு வரவும் வாய்ப்புள்ளது.
ராகுல் டிராவிட் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்க காலத்தில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என். சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் பெற்று விளையாடியுள்ளார். மேலும், அதே நிறுவனத்தில் அவர் ஒரு கவுரவப் பதவியிலும் இருந்தார். இதன் காரணமாக, ராகுல் டிராவிட் இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த பயிற்சியாளர், பேட்டிங் ஜாம்பவான் என்பதோடு சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் நெருக்கமானவர் என்ற அடிப்படையில், அவர் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

