டெல்லியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி மட்டும் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் (H1N1) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பதிவான 159 புதிய இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகளில், 114 ஆக உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயர்வால், இந்த ஆண்டு டெல்லியில் இதுவரை பதிவான ஒட்டுமொத்த H1N1 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,777 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 2,602 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே நாளில் பாதிப்பு எட்டு மடங்கு அதிகரித்துள்ளதை அடுத்து, மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா உடனடியாக டெல்லி சுகாதார அமைச்சர் டாக்டர் பங்கஜ் குமார் சிங் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், டெல்லி தேசிய தலைநகரப் பிரதேச அரசின் மூத்த சுகாதார அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டெல்லியில் உள்ள சுகாதார வசதிகளின் தயார்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, மருத்துவமனைப் படுக்கைகளின் இருப்பு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் (ICU) தயார்நிலை மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் கையிருப்பு ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
