சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் வீசிய பயங்கர புயலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இரு அணி வீரர்களும் கருப்புப் பட்டைகளை அணிந்து விளையாடினர். லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி சென்னை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
வட மாநிலங்களில் ஏற்பட்ட இந்த புழுதிப் புயல், பலத்த மழை மற்றும் மின்னல் தாக்குதல்களால் இதுவரை 96 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் வியாழக்கிழமை அன்று தகவல்கள் வெளியிட்டனர். இந்தியாவின் மக்கள் தொகை மிகுந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்கள் புதன்கிழமை இரவு இந்த கோர சம்பவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புயலில் சிக்கி உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 'உத்தரப்பிரதேச புயல் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, லக்னோ மற்றும் சென்னை அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள், போட்டி நடுவர்கள் கருப்புப் பட்டைகளை அணிந்துள்ளனர்' என ஐபிஎல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது.
அதிகாரிகள் கூறுகையில், வேரோடு சாய்ந்த மரங்கள், இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் மின்னல் தாக்குதல்களே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணம் என தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது போன்ற புயல்கள் வட இந்தியாவில் கோடைக்காலத்தில் சாதாரணமாக நிகழும் என்றாலும், இந்த முறை பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கிராமப்புறங்களில் வீடுகள், விவசாயப் பயிர்கள் மற்றும் மின் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்த ஒருவர், 'புயல் திடீரென வந்தது. சில நிமிடங்களிலேயே வானம் இருண்டுவிட்டது. தகரக் கூரைகள் பறந்தன, மக்கள் வீட்டிற்குள் ஓடி ஒளிந்தனர். மாலை முழுவதும் மரங்கள் விழுந்து சத்தம் கேட்டது' என்று அந்த பயங்கர அனுபவத்தை விவரித்தார்.