கிரிக்கெட் நேரலை: ஆணுறை, டேட்டிங் செயலி விளம்பரங்களுக்கு தடை கோரிக்கை!

சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரி (CTI) தலைவர் பிரிஜேஷ் கோயல்

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் உட்பட கோடிக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் நேரலை போட்டிகளை கண்டு ரசிக்கின்றனர். இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் நேரடி ஒளிபரப்பின் போது, 'டியூரெக்ஸ் கான்டம்' போன்ற ஆபாச விளம்பரங்கள் தடையின்றி ஒளிபரப்பப்படுவதற்கு டெல்லி மற்றும் நாட்டின் முன்னணி வர்த்தக அமைப்பான 'சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரி' (CTI) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, CTI அமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல் மற்றும் நிர்வாகிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில், 'இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல, அது ஒரு மதம் போன்றது. குழந்தைகள் உட்பட சுமார் 44 கோடி மக்கள் குடும்பத்துடன் இந்த போட்டிகளை நேரலையில் பார்க்கிறார்கள். போட்டியின் ஓவர்களுக்கு இடையே 'டியூரெக்ஸ் கான்டம்' விளம்பரங்கள் காட்டப்படுவது மிகவும் பொறுப்பற்ற செயலாகும். இது குழந்தைகளுடன் அமர்ந்து மேட்ச் பார்க்கும் பெற்றோருக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

CTI தலைவர் பிரிஜேஷ் கோயல் தனது 13 வயது மகனுடன் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தபோது, இந்த கான்டம் விளம்பரம் குறித்து மகன் கேட்டதாகவும், அது தனக்கு மிகுந்த தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கியதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், நாடெங்கும் லட்சக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளுடன் மேட்ச் பார்க்கும்போது இத்தகைய சங்கடங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'மது மற்றும் சிகரெட் விளம்பரங்களுக்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற விளம்பரங்களை ஓவர்களுக்கு இடையே காட்ட எப்படி அனுமதி வழங்கப்படுகிறது?' என்று CTI அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் நேரமான இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பப்படும் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் கான்டம், டேட்டிங் செயலிகள் மற்றும் இதர ஆபாச வகை விளம்பரங்களுக்கு ஐசிசி உடனடியாக முழு தடை விதிக்க வேண்டும் என CTI வலியுறுத்தியுள்ளது.

மது மற்றும் புகையிலை விளம்பரங்களுக்கு இருப்பது போல, பிசிசிஐ மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களது ஒளிபரப்பு கூட்டாளர்களுடன் போடும் ஒப்பந்தத்தில் 'பேமிலி வியூவிங் கோட்' முறையை கட்டாயமாக்க வேண்டும் என்றும், விதியை மீறி இதுபோன்ற விளம்பரங்களை ஒளிபரப்பும் சேனல்கள் மற்றும் கிரிக்கெட் வாரியங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் CTI தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் மனநலனைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை அடுத்த ஐசிசி போர்டு கூட்டத்தில் முதன்மை Agenda-வாக எடுத்துக்கொண்டு, 30 நாட்களுக்குள் முறையான கொள்கையை வகுக்க வேண்டும் என ஐசிசி தலைவர் ஜெய் ஷாவிடம் CTI கோரிக்கை விடுத்துள்ளது. தேவைப்பட்டால், இந்த விவகாரத்தை நாடாளுமன்றம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்ல உள்ளதாக CTI எச்சரித்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகளின் நேரலை ஒளிபரப்பின் போது, ஆபாசமான அல்லது வயது வந்தோருக்கான விளம்பரங்கள் காட்டப்படுவது பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குழந்தைகளின் முன்னிலையில் இதுபோன்ற விளம்பரங்கள் வருவது அவர்களின் மனநலனை பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. எனவே, இந்த விஷயத்தில் ஐசிசி மற்றும் பிசிசிஐ உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக CTI அமைப்பு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு, பல பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் பாதுகாப்பாக நிகழ்ச்சிகளை காணும் சூழலை உறுதி செய்ய இது ஒரு முக்கிய படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது குறித்து உரிய கொள்கை வகுக்கப்படாவிட்டால், அடுத்தகட்டமாக நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து குரல் எழுப்பப்படும் என CTI தெரிவித்துள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version