தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் ஆட்சி நிறைவை ஒட்டி, வருவாயை காரணம் காட்டி 10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த அரசின் 100 நாள் சாதனையா என தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்திய அளவில் கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக செயல்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான கோ-ஆப்டெக்ஸ் (Co-optex), நாடு முழுவதும் சுமார் 146-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை இயக்கி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரிய கைத்தறி ஆடைகள் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் நுகர்வோரை சென்றடைகின்றன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வருவாய் இழப்பை சுட்டிக்காட்டி, ஆந்திராவில் 5 விற்பனை நிலையங்களையும், தமிழகத்தில் 4 விற்பனை நிலையங்களையும், கோவாவில் ஒரு விற்பனை நிலையத்தையும் இந்த மாத இறுதிக்குள் மூட கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 10 விற்பனை நிலையங்கள் மூடப்பட உள்ளன.
தமிழகம், ஆந்திரா, கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள இந்த 10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை அடுத்தடுத்து மூட தமிழ்நாடு அரசின் கைத்தறித் துறை எடுத்துள்ள முடிவுக்கு கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் மூடல் நடவடிக்கை நெசவாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் கடைகள் தமிழகம் மட்டுமின்றி, டெல்லி, மகாராஷ்டிரா உட்பட இந்தியாவின் 15 மாநிலங்களில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில், குறிப்பிட்ட சில விற்பனை நிலையங்களை மட்டும் மூடும் முடிவு, அரசின் கொள்கை முடிவுகளில் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையைக் காட்டுவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வருவாய் குறைவை சரிசெய்ய மாற்று வழிகளை ஆராயாமல், உடனடியாக விற்பனை நிலையங்களை மூடும் நிர்வாகத்தின் முடிவை தொழிலாளர் சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது. இது அரசின் 100 நாள் சாதனைகளில் ஒரு கரும்புள்ளியாக பார்க்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டால், பல ஆண்டுகளாக கோ-ஆப்டெக்ஸ் உடன் இணைந்து பணியாற்றி வரும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், பல ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் சங்கத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த மூடல் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
