கோவை ஈச்சனாரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் விடுதி உணவகத்தில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரவு உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர்.
நேற்று இரவு, மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது, பரிமாறப்பட்ட உணவில் புழுக்களும் பூச்சிகளும் மிதந்துள்ளன. இதைக் கண்ட மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து விடுதி காப்பாளர் மற்றும் உணவகப் பொறுப்பாளர்களிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.
ஆனால், மாணவர்களின் புகாருக்கு நிர்வாகத்தின் தரப்பில் உரிய பதிலோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், விடுதி வளாகத்திற்குள் திரண்டு திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவை வழங்கி மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம்' என மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் நள்ளிரவில் விடுதி வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மற்றும் போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உடனடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகத்தினர் உறுதியளித்தனர்.
இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், இது தொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம், விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. மாணவர்களின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

