கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டதாகக் கூறி, அப்புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்திற்கு இலவச மனை அல்லது வீடு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காடாம்பாடியைச் சேர்ந்த ஒருவர், தனது மகளுக்கு ஏற்பட்ட அநியாயம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் மக்கள் குறைதீர் முகாமில் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில், 'எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது மகளுக்கு 2018-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், அவரது உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம்.
மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், குழந்தைக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. சில மாதங்களிலேயே மீண்டும் குழந்தைக்கு அடுத்தடுத்து உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டன. மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தபோது, பல ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதுதான், குழந்தைக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த செய்தி எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் கொடுத்தது.
எங்களுக்கும், எனது மனைவிக்கும், மற்றொரு குழந்தைக்கும் பரிசோதனை செய்ததில் யாருக்கும் எச்ஐவி தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கோவை அரசு மருத்துவமனையில் எனது குழந்தைக்குச் செலுத்தப்பட்ட ரத்தம் மூலமாகவே எச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் பல ஆண்டுகளாகப் புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளேன். நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கொடிய நோயுடன் எனது குழந்தை போராடிக் கொண்டிருக்கிறாள். எனது மனைவிக்கும் உடல்நல பாதிப்புகள் உள்ளன. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, மாவட்ட நிர்வாகம் எனது மகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், எங்கள் குடும்பத்திற்கு இலவச மனை அல்லது வீடு கட்டித் தர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
