கோவையில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சூலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது மனிதநேயமற்ற செயல் என எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு தாங்கள் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவு செய்வதாக அவர் கூறியுள்ளார்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில் ஏற்படும் தாமதம், சட்ட சலுகைகள் போன்றவை குற்றவாளிகளுக்கு தைரியத்தை அளித்து, இது போன்ற கொடூரங்கள் தொடர்கதையாக காரணமாகின்றன. வெறும் சட்ட புத்தகங்களால் குற்றங்களை தடுத்துவிட முடியாது. சமரசமற்ற கடுமையான நடவடிக்கைகள், காலதாமதமற்ற விரைவான புலனாய்வு, உறுதியான அதிரடித் தண்டனை ஆகியவை மட்டுமே இது போன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்டை வீட்டாரே இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது, நம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழலை உணர்த்துவதாகவும், தமிழகம் பெண்களுக்கும், பிஞ்சு பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவருவது மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் அளிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே, தமிழக அரசும், காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து இந்த விஷயத்தில் உடனடியாகவும் உறுதியாகவும் தலையிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து, எவ்வித சலுகையும் இன்றி, மற்றவர்களுக்கு பாடமாய் அமையும் வகையில் மிக கடுமையான தண்டனை விரைவாக பெற்றுத்தரப்பட வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வெற்று வார்த்தைகளால் ஆறுதல் கூறுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு பெண் குழந்தைக்குக்கூட இத்தகைய கொடூரம் நிகழ கூடாது என்கிற அடிப்படையில் தமிழக அரசும், நீதித்துறையும் போர்க்கால அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என்றும் முகம்மது முபாரக் உறுதியளித்துள்ளார்.