சென்னை பெருநகரப் பகுதியில் இனி அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமே (சி.எம்.டி.ஏ.) நேரடியாக வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இதுநாள் வரை பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி பெறுவது நீண்ட கால தாமதத்தை ஏற்படுத்தி வந்தது. இதை தவிர்க்கும் நோக்கில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின்படி இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கட்டிட அனுமதி பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் சமர்ப்பித்து, கள ஆய்வு மற்றும் கூர்ந்தாய்வுக்குப் பிறகு, பல அடுக்குமாடி கட்டிடக் குழுவின் பரிசீலனை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அரசாணை பெற்ற பின்னரே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையால் ஏற்படும் கால தாமதத்தை குறைக்கும் வகையில், இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய அரசாணையின்படி, கட்டிட விதிமுறைகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு, பல அடுக்குமாடி கட்டிடக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சி.எம்.டி.ஏ. நேரடியாக திட்ட அனுமதியை வழங்க முடியும். இதன் மூலம் கட்டிடத் திட்டங்கள் விரைவாகவும், எளிமையாகவும் ஒப்புதல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அரசாணை, சென்னை பெருநகரப் பகுதியில் கட்டிடப் பணிகளை மேற்கொள்வோருக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்ட அனுமதியில் ஏற்படும் கால தாமதம் தவிர்க்கப்படுவதால், கட்டுமானத் திட்டங்கள் குறித்த நேரத்தில் நிறைவடைய வழிவகுக்கும்.