தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்தம்: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்தம் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதும் முதலமைச்சர் விஜய்

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவரவிருக்கும் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த திருத்தங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய உணவு பாதுகாப்பு (திருத்தச்) சட்ட வரைவை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு, 2013 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் தற்போது குடும்பங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள் உரிமைகளை மாற்றுவதற்கு வகை செய்வதாக முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், ஒரு குடும்பத்திற்கு மாதந்தோறும் 35 கிலோகிராம் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தத்தின்படி, ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 35 கிலோகிராம் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு, ஒரு நபருக்கு மாதமொன்றிற்கு 7 கிலோகிராம் உணவு தானியங்கள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், தமிழ்நாட்டின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 ஆக இருப்பதால், மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பங்களுக்குக் கிடைக்கும் உணவு தானியங்களின் அளவைக் கணிசமாகக் குறைக்கும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு, இத்திருத்தத்தின் நோக்கம், பல்வேறு உள்-வகைப்பாடுகளுக்கிடையே நிலவும் தேவைகளுக்கேற்ப சமத்துவமின்மையைக் களைவதும், ஊட்டச்சத்து உணவுப் பொருள் உரிமைகளைச் சரியாக ஒழுங்குபடுத்துவதுமே என விளக்கமளித்துள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டில் தற்போது 18,64,600 அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம் சுமார் 69,26,983 ஏழைப் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். இவர்களில் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வாதாரத்திற்கு நிலையான வருமானம் இல்லாத மூத்த குடிமக்கள், பழங்குடியினர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் போன்ற சமூகத்தின் மிகவும் நலிவடைந்த பிரிவினர் அடங்குவர்.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், மிக வறுமையில் வாடும் மக்களின் இறுதிச் சட்டப் பாதுகாப்பிற்கான ஒரு நடவடிக்கையாகவே நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு குடும்பத்திற்கும் போதிய உணவு தானியங்கள் கிடைக்காமல் போய்விடவோ அல்லது பசி, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படவோ கூடாது என்பதற்காகவே, இதன் உரிமைகள் எளிமையானதாகவும், நிபந்தனையற்றதாகவும், குடும்ப அடிப்படையிலானதாகவும் வடிவமைக்கப்பட்டன. இந்த உரிமையை, நபர் ஒருவருக்கான பங்காக மாற்றி, குடும்ப அளவில் உச்சவரம்பு விதிப்பது, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களைத் தண்டிப்பதாக அமையும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, தமிழ்நாட்டில் உள்ள AAY குடும்ப அட்டைதாரர்களுக்காக மாதந்தோறும் 65,261 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் ஒன்றிய அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன. முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் நடைமுறைக்கு வந்தால், ஒரு நபருக்கு 7 கிலோ கிராம் என்ற விதிமுறையின் கீழ், இந்த விநியோக அளவு சுமார் 42,040 மெட்ரிக் டன்னாகக் குறையும். இது சுமார் எழுபது இலட்சம் ஏழை, நலிவடைந்த மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும்.

தமிழ்நாடு அரசு, ஒரு வலுவான மற்றும் சிறப்பாக நிர்வகிக்கப்படும் பொது விநியோகத் திட்டத்தை (PDS) செயல்படுத்தி வருகிறது. அரிசியை முதன்மை உணவாகக் கொண்ட தமிழ்நாட்டில், AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, அவர்களின் அன்றாட உணவிற்கு இன்றியமையாதது. வெளிச்சந்தையில் இருந்து மாற்று உணவுப் பொருட்களை வாங்குவது அவர்களுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்தி, அவர்களை வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பசியின் பிடிக்கு ஆட்படுத்திவிடும். 5 உறுப்பினர்களுக்கும் குறைவான குடும்ப அளவைக் கொண்ட AAY குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 15.75 இலட்சம் ஆகும். இந்த திருத்தத்தால் தமிழ்நாடு மட்டுமல்லாது, இதுபோன்ற பிற மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version