தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்தில் மாற்றம் செய்யும் பணிகளுக்காக விடப்பட்ட டெண்டரில் எந்தவிதமான விதிமீறல்களும் நடைபெறவில்லை என பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது. அரசு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான டெண்டர் நடைமுறைகள் குறித்த விதிமுறைகளை பொதுப்பணித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. ரூ.10 கோடிக்கு குறைவான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோர 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும், ரூ.10 கோடிக்கு மேல் உள்ள பணிகளுக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றும் விதிமுறைகள் கூறுகின்றன.
இந்த விதிகளின்படி, முதல்வர் விஜய் அவர்களின் அலுவலகத்தை ரூ.5 கோடி செலவில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள பிளாக்-1, பிளாக்-2 மற்றும் பிளாக்-3 ஆகியவற்றை மாற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்த விதிகள் (Tamil Nadu Tender Transparency Act) பின்பற்றப்பட்டு, கண்காணிப்பு பொறியாளர் அவர்களின் தலைமையில் ஒப்பந்தப்புள்ளி கடந்த ஆகஸ்ட் 12, 2026 அன்று கோரப்பட்டது. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் படிவங்கள் ஆகஸ்ட் 17, 2026 அன்று காலை 10 மணிக்கு மின்னணு முறையில் ஒப்பந்தங்களுக்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 1, 2026 அன்று மாலை 3 மணி ஆகும்.
செய்தித்தாள்களில் ஒப்பந்தப்புள்ளி வெளியான ஆகஸ்ட் 13, 2026 முதல் கடைசி நாளான செப்டம்பர் 1, 2026 வரை 18 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இணையதளத்தில் வெளியான ஆகஸ்ட் 17, 2026 முதல் கடைசி நாளான செப்டம்பர் 1, 2026 வரை 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், எவ்வித விதிமீறல்களும் இல்லை என்று பொதுப்பணித்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், 10வது தளத்தில் இருந்த தடுப்புகள், மேஜை நாற்காலிகள் மற்றும் பொய்க்கூரைகளை அகற்றும் பணிகள் நாமினேசன் (Nomination Basis) முறையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம் மற்றும் லோக்பவன் போன்ற முக்கிய இடங்களில் விரைவாக பணிகளை மேற்கொள்ள இந்த நாமினேசன் முறை பயன்படுத்தப்படுவது வழக்கம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு முன்பாக நிர்வாக அலுவலகம் அமைக்கும் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொதுப்பணித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் விதிமுறைகளின்படி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

