தமிழக முதல்வர் விஜய், நாளை டெல்லி செல்ல உள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, விஜய் பிரதமரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பின்போது, மேகேதாட்டு விவகாரம், சென்னை மெட்ரோ திட்டம், பிஎம்ஸ்ரீ கல்வி நிதி உள்ளிட்ட தமிழகம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை முதல்வர் விஜய் பிரதமரிடம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது. இது தவிர, காங்கிரஸ் கட்சித் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் முதல்வர் விஜய் நாளை திறந்து வைக்க உள்ளார். நாளை காலை சென்னையிலிருந்து புறப்படும் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.
முதல்வர் விஜய்யின் இந்த திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிமுகவின் விக்கெட்டுகளை வீழ்த்தி, விஜய்யின் அரசியல் இலக்கு என்னவாக இருக்கும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த பயணத்தின் மூலம் அவர் என்னென்ன அரசியல் நகர்வுகளை மேற்கொள்வார் என்பது அரசியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

