தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இரண்டாவது முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நாளை (ஜூன் 11) நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் இன்று (ஜூன் 10) காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி போன்றோரும் பங்கேற்கின்றனர்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல், முதலமைச்சர் விஜய் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். இது முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளாகக் கருதப்படுகிறது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புகள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதலமைச்சர் விஜய், மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். இந்த முறை முதலமைச்சர் விஜய் டெல்லியில் 3 நாட்கள் தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அவரது இரண்டாவது டெல்லி பயணமாகும்.