தமிழக முதல்வராக மே 10ம் தேதி பொறுப்பேற்ற விஜய், வரும் 11ம் தேதி டில்லியில் நடைபெறும் 'நிடி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதற்காக, நாளை (10ம் தேதி) டில்லிக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது, தமிழகத்தின் தேவைகளுக்கான நிதியை பெறுவது குறித்து பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
முன்னதாக, கடந்த 27ம் தேதி டில்லி சென்றிருந்த முதல்வர் விஜய், பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, இந்த முறை ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவும் விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
முதல்வரின் முதல் டில்லி பயணத்தின்போது, அவருடன் உதவியாளர், அரசியல் ஆலோசகர் மற்றும் சிகை அலங்கார நிபுணர்கள் மட்டுமே தனி விமானத்தில் சென்றது விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த முறை, முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளும் தனி விமானத்தில் பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறை, தமிழகத்தின் முக்கிய தேவைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துரைக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். மேலும், முக்கிய மத்திய அமைச்சர்களையும் சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் பெறவும் அவர் முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.