திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'உங்கள் அலட்சிய ஆட்சிக்கு எங்கள் குழந்தைகள் பலியாக வேண்டுமா?' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முந்தைய ஆட்சியைப் போலவே, தற்போதைய திமுக ஆட்சியிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 'மாற்றம்' என்று நம்பி வாக்களித்த தமிழக மக்கள் ஏமாந்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கிற்குப் பிறகாவது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தியதன் விளைவுதான், தற்போது நமது மாநிலத்தின் அடுத்த மழலைச் செல்வத்தை நாம் பலி கொடுத்துள்ளோம் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
எந்தக் குழந்தைகளை கொஞ்சி, கெஞ்சி வாக்குக் கேட்டு ஆட்சிக்கு வந்தீர்களோ, அதே குழந்தைகளை மனித உருவில் உலவும் மிருகங்கள் வேட்டையாடுவதை கைகட்டி வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். எனவே, அடுத்த குழந்தை பலியாவதற்கு முன்பாவது உங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்யும் சட்ட திட்டங்களை வகுத்து, அனைத்து குழந்தைகளின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்ய அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.