சென்னையில் சொத்து வரி நான்கு மடங்கு உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட விளக்கத்தில், சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்றும், இது தவறான தகவல் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் ஆதாரமாக சொத்து வரி விளங்குகிறது. மாநகராட்சி சார்பில் சொத்து வரி வசூலிப்பு முகாம் கடந்த 3 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கட்டிடங்கள் மற்றும் காலி மனையிடங்கள் மீது விதிக்கப்படும் இந்த வரி, கட்டிடங்களின் ஆண்டு வாடகை மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கட்டிடம் பயன்படுத்தப்படும் விதத்திற்கேற்ப வரி விதிக்கப்படும். சொந்த வீடு, கட்டிடம், வணிக நிறுவனம் போன்றவற்றை வைத்திருப்பவர்கள் சொத்து வரி செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.
இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் கடந்த ஆண்டு ரூ.5,000 சொத்து வரி செலுத்திய ஒரு கட்டிட உரிமையாளருக்கு, இந்த ஆண்டு ரூ.28,000 வரி விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியது. முறையான அறிவிப்பு இன்றி, எந்த காரணமும் இன்றி சொத்து வரியை நான்கு மடங்கு உயர்த்திவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த செய்தி சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், 'சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. இது உண்மைக்கு மாறான தகவல். அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்படும் இதுபோன்ற பொய் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், சில சொத்துக்களின் மதிப்பீடு குறைவாக செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் வரி செலுத்தப்பட்டிருக்கலாம். தற்போது அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது. யாருக்கேனும் ஆட்சேபனை இருப்பின், அவர்கள் 15 நாட்களுக்குள் வட்டார துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம். அதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, சென்னையில் சொத்து வரி நான்கு மடங்கு உயர்த்தப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்றும், மக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் என்றும் மாநகராட்சி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கத்தை மாநகராட்சி ஆணையர் வழங்கியுள்ளார்.
சொத்து வரி என்பது தனிநபர் அல்லது நிறுவனத்தின் சொத்துகள் மீது விதிக்கப்படும் வரியாகும். பொதுவாக, அந்த நபர் அல்லது நிறுவனத்திற்கு சொந்தமான இடத்திற்கு அரசு இந்த வரியை விதிக்கும். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்றவற்றில் உள்ள கட்டிடங்கள் மற்றும் காலி மனையிடங்கள் மீது செய்யப்படும் வரி விதிப்பு சொத்து வரி எனப்படுகிறது. இதன் மூலம் மாநகராட்சி தனது வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியை திரட்டுகிறது.

