சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக, நாளை (27.06.2026) சனிக்கிழமை முதல் எல்.பி. சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து எல்.பி.-எம்.ஜி. சாலை சந்திப்பு வரை சாலை முழுமையாக மூடப்படுகிறது.
திருவான்மியூரிலிருந்து திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், எல்.பி.-எம்.ஜி. சாலை சந்திப்பில் இருந்து எம்.ஜி. சாலை, சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாக எல்.பி. சாலையை அடைய வேண்டும். பெசன்ட் நகரில் இருந்து 7வது அவென்யூ வழியாக வரும் வாகனங்கள் எம்.ஜி. சாலையில் வலதுபுறம் திரும்பி, சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை மற்றும் 1வது அவென்யூ வழியாக எல்.பி. சாலையை அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்.பி. சாலையிலிருந்து திருவான்மியூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், சாஸ்திரி நகர் 1வது அவென்யூ, 11வது குறுக்கு சாலை, 8வது குறுக்கு சாலை, 10வது குறுக்கு சாலை வழியாக எம்.ஜி. சாலையை அடைந்து தங்கள் இலக்கை அடையலாம். திருவான்மியூரிலிருந்து திரு.வி.க. பாலம் செல்லும் இலகுரக வாகனங்கள், எல்.பி.-எம்.ஜி. சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2வது அவென்யூ 1வது பிரதான சாலை, 1வது அவென்யூ இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சிக்னல் வழியாக எல்.பி. சாலையை அடைய வேண்டும்.
சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை, எம்.ஜி. சாலை, எல்.பி. சாலை மற்றும் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ, 1வது பிரதான சாலை பகுதிகள் தற்காலிகமாக இருவழிப் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை திரு.வி.க. பாலம் நோக்கி ஒருவழிப் பாதையாகவும், 11வது குறுக்கு சாலை திருவான்மியூர் நோக்கி ஒருவழிப் பாதையாகவும் செயல்படும். இந்திரா நகர் 2வது அவென்யூவில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை.