சென்னையின் பரபரப்பான சவுகார்பேட்டை பகுதியில் நகைக்கடை அதிபர் வீட்டில், அவரது வீட்டுப் பணியாளர் மற்றும் அவரது கூட்டாளி சேர்ந்து சுமார் ரூ.5.25 லட்சம் ரொக்கத்தையும், 25 பவுன் தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவுகார்பேட்டையைச் சேர்ந்த சம்பத்ராஜ் (66) மற்றும் அவரது மகன் பிரமோத் மேத்தா ஆகியோர் என்எஸ்சி போஸ் சாலையில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பத்ராஜ் தனது மனைவியை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். அப்போது, வீட்டுப் பணியாளரான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மோனுவிடம் வீட்டின் சாவியை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.
சம்பத்ராஜின் மகன் பிரமோத், பணியாளர் மோனுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டபோது, ராஜேஷ் குமார் என்ற உறவினரைப் பார்க்கச் செல்வதாகவும், அதற்காக ரேபிடோ பைக் டாக்சி புக்கிங் செய்து கொண்டிருப்பதாகவும் மோனு பதிலளித்துள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் பிரமோத் போன் செய்தபோது, மோனுவின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இரவில் சம்பத்ராஜும் அவரது மனைவியும் வீடு திரும்பியபோது, குடியிருப்பு வளாகத்தின் காவலாளி, வீட்டுப் பணியாளர் மோனு சாவியை அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் மற்றும் நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது. ஏழு கிணறு காவல் நிலையத்தில் சம்பத்ராஜ் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வீட்டுப் பணியாளர் மோனுவும், பிரமோத் வீட்டில் முன்பு பணியாற்றிய ராஜேஷ் குமாரும் சேர்ந்து இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. வேலைக்குச் சேர்ந்து 9 மாதங்களிலேயே இந்தச் செயலில் ஈடுபட்ட இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

