சென்னையில் மூதாட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் தேடல்

சென்னையில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பொன்னம்மாள், தனது கணவர் மறைவுக்குப் பிறகு, பென்ஷன் பணத்தை நம்பி தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆறு பெண் பிள்ளைகள் உள்ளனர், அவர்களும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று, பொன்னம்மாளின் வீட்டிலிருந்து வெளியே வந்த புதிய முகங்களைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், சந்தேகமடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது. பொன்னம்மாள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், முகம் முழுவதும் காயங்களுடனும் கிடந்துள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர், பொன்னம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். கழுத்தை நெரித்தும், கொடூரமாக தாக்கியும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்காக உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரண்டு வாலிபர்கள் பொன்னம்மாளின் வீட்டிற்குள் செல்வதும், பின்னர் பதற்றமின்றி வெளியேறி ஆட்டோவில் ஏறி தப்பிச் செல்வதும் பதிவாகியுள்ளது. குறிப்பாக, அவர்கள் பொன்னம்மாளின் வீட்டிற்கு சற்று தொலைவிலேயே ஆட்டோவை நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் சென்றுள்ளனர். தப்பிச் செல்லும் வழியில், அவர்கள் ஓட்டிச் சென்ற ஆட்டோ, ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதும் பதிவாகியுள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், பொன்னம்மாள் சமீபத்தில் சூரப்பட்டு பேருந்து நிலையம் அருகே சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை விற்றுள்ளார் என்றும், அதில் தலா 5 லட்சம் ரூபாயை தனது ஆறு மகள்களுக்கும் கொடுத்துவிட்டு, மீதம் ஒரு லட்சம் ரூபாயை வீட்டில் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று, பொன்னம்மாள் ஒருவரிடம் போனில் பேசியபோது, 'இடத்தை விற்றுவிட்டதாகவும், வீட்டில் ஒரு லட்சம் ரூபாய் இருப்பதாகவும்' கூறியது ஆட்டோ டிரைவரின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இந்த தகவலைப் பயன்படுத்தி, இறக்கிவிட்ட சில நிமிடங்களிலேயே தனது கூட்டாளிகளுடன் வந்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பணம் பறிப்பதற்காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version