தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறையின் சார்பில், கோடை வெயிலின் பாதிப்புகளைத் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அத்தியாவசிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். சுற்றுப்புற வெப்பநிலை அதிகரிக்கும்போது, உடல் வியர்வை மற்றும் இரத்த ஓட்டம் மூலம் அதிக வெப்பத்தை வெளியேற்றி தன்னை சீராக வைத்துக்கொள்ளும். இருப்பினும், கோடை வெப்பம் அதிகமாகும்போது உடலில் நீர்ச்சத்து மற்றும் உப்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். குறிப்பாக, பச்சிளம் குழந்தைகள், சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் கோடை வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும், வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும் அளவுக்கு நீர் அருந்த வேண்டும். சூடான பானங்களைத் தவிர்த்து, மோர், உப்பு கலந்த அரிசிக்கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். கரைசல் போன்றவற்றை அருந்தலாம். வெளியே செல்லும்போது தலையில் பருத்தி துணி, தொப்பி அல்லது குடை பயன்படுத்த வேண்டும். பயணத்தின்போது குடிநீர் பாட்டிலை எடுத்துச் செல்வது அவசியம். வியர்வை எளிதில் வெளியேறக்கூடிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பகலில் உடற்பயிற்சி செய்வதையும், தேவையில்லாமல் வெயிலில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். வீடுகளில் ஜன்னல்களை திரைச்சீலைகளால் மூடி, இரவு நேரங்களில் காற்றோட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும். குளிர்ந்த நீரால் குளிப்பது நல்லது.
வெயிலில் வேலை செய்யும்போது தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக நிழலான இடத்திற்குச் சென்று தண்ணீர், எலுமிச்சை சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், அதிக தாகம், கால் அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். யாரேனும் மயக்கமடைந்தால், உடனடியாக மருத்துவரை அழைத்து, அவர்களை ஒரு பக்கமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும். நாடித்துடிப்பு, சுவாசம் ஆகியவற்றை பரிசோதித்து, கால் மற்றும் இடுப்பை உயர்த்தி, உடைகளை தளர்த்தி, ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். குளிர்ந்த நீரை உடல் முழுவதும் தெளித்து, காற்றோட்ட வசதியை ஏற்படுத்த வேண்டும். வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின், பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுக்கக்கூடாது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 200 நல்வாழ்வு மையங்கள், 16 சமூக நல மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள், தொற்று நோய் மருத்துவமனை ஆகியவை வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளன. இங்கு தேவையான மருந்துகளும், 1.34 லட்சம் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகளும் கையிருப்பில் உள்ளன. மேலும், வெயில் அதிகமாக உள்ள நேரங்களில் பொதுமக்கள் மாநகராட்சியின் 57 வீடற்றோர் காப்பகங்களில் தங்கி கொள்ளலாம். இந்த முன்னேற்பாடுகள் மற்றும் மாநகராட்சி அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.