சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடுமையான மோதல் மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேயர் பிரியா சமாதானம் செய்ய முயன்றும், இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
நேரமில்லா நேரத்தில் பேச வாய்ப்பு பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர் சாமுவேல் திரவியம், 'பெருந்தலைவர் காமராஜர் வாழ்க… தளபதி முதல்வர் விஜய்க்கு நன்றி' எனக் கூற முற்பட்டபோது, திமுக கவுன்சிலர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். அவர்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து வந்து காங்கிரஸ் கவுன்சிலர்களைச் சூழ்ந்து கொண்டு 'நம்பிக்கை துரோகி காங்கிரஸ்' என ஆவேசமாகக் கூச்சலிட்டனர்.
இதற்குப் பதிலடியாக, காங்கிரஸ் கவுன்சிலர்களும் '5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல என்ன ஆச்சு' என ஆக்ரோஷமாக முழக்கமிட, இருதரப்புக்கும் இடையிலான வாக்குவாதம் கைகலப்பு வரை செல்லும் அளவுக்கு முற்றியது. இதனால், காங்கிரஸ் கவுன்சிலர்கள் அவையை விட்டுப் பாதியிலேயே வெளியேறினர்.
இந்த அசாதாரண சூழல் காரணமாக, மேயர் பிரியா எந்தத் தீர்மானங்களையும் நிறைவேற்றாமல் அவையை அவசரமாக முடித்து வைத்து, தேசிய கீதம் பாட உத்தரவிட்டார்.