சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, காவிரி நீரை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் 51-வது கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்கள் பிரதிநிதிகளை இந்த ஆணையத்தில் நியமித்துள்ளன.
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என தமிழகம் கோரியுள்ளது. ஆனால், இதுகுறித்து ஆணையம் இதுவரை எந்த உத்தரவையும் பிறப்பிக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்தச் சூழலில், நாளை காலை 11:30 மணிக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் கூட்டம் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீர், மேகதாது அணை விவகாரம், கர்நாடகாவிலிருந்து மாதவாரியாகப் பெற வேண்டிய நீர், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் நிலவும் வானிலை போன்ற முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். காவிரி நீர் பங்கீடு தொடர்பான முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.