சீனாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி (BYD), தனது புதிய சொகுசு எஸ்யூவி கார்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஃபியாங் செங் பாவோ' (Fang Cheng Bao) என்ற புதிய துணை பிராண்டின் கீழ், 'பாவோ 5' (Bao 5) மற்றும் 'பாவோ 8' (Bao 8) ஆகிய இரண்டு பிரம்மாண்ட மாடல்களை இந்நிறுவனம் களமிறக்கியுள்ளது. இந்த கார்களின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.43 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கார்களின் மிக முக்கிய சிறப்பம்சமாக, அதிநவீன சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் திகழ்கிறது. வழக்கமாக 4 சக்கரங்களைக் கொண்ட இந்த காரில், ஒரு டயர் பழுதடைந்தாலும் கூட, மீதமுள்ள 3 சக்கரங்களை மட்டுமே வைத்து பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியும். இதன் மூலம், விபத்து காலங்களில் காரின் சமநிலையை இழக்காமல் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த தனித்துவமான தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
'பாவோ 5' மாடல் ஒரு பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV) வாகனமாகும். இது கரடுமுரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் முரட்டுத்தனமான வெளிப்புறத் தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 680 குதிரைத்திறன் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதுடன், வெறும் 4.8 விநாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டிவிடும். பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் பேட்டரி என இரண்டின் மூலம் இயங்கும் இந்தக் கார், முழுமையாக சார்ஜ் மற்றும் டேங்க் நிரப்பப்பட்ட நிலையில் சுமார் 1,200 கி.மீ தூரம் வரை பயணிக்கக்கூடிய ரேஞ்சைக் கொண்டுள்ளது. 'பாவோ 8' எலக்ட்ரிக் காரில் 1380 கி.மீ. ரேஞ்ச் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பாவோ 8' மாடல், குடும்பத்துடன் நீண்ட தூரம் சொகுசாகப் பயணம் செய்ய ஏற்ற வகையில் மூன்று வரிசை இருக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் மிகப்பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிரீமியம் லெதர் இருக்கைகள், ஏடிஏஎஸ் (ADAS) எனப்படும் நவீன பாதுகாப்பு வசதிகள் எனப் பல சொகுசு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. டெஸ்லா போன்ற நிறுவனங்களுக்குக் கடும் போட்டியாளராக உருவெடுத்துள்ள பிஒய்டி, இந்த புதுமையான தொழில்நுட்பங்களால் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. தற்போதைக்கு இந்த பாவோ சீரிஸ் கார்கள் சீனச் சந்தையில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன. விரைவில் உலகளாவிய சந்தைகளிலும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என ஆட்டோமொபைல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.