பிரேசிலில், காதலை முறித்துக் கொண்ட முன்னாள் காதலியை கடத்திச் சென்று, அவரது கை, கால்கள் மற்றும் கழுத்தில் சங்கிலியால் கட்டி, கொடூரமாக சித்திரவதை செய்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 வயதான எமிலியானே என்பவர், அய்ல்டன் ரோட்ரிக்ஸ் டி சௌசா என்பவரை காதலித்து வந்துள்ளார். திடீரென, அய்ல்டனின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் பிடிக்காததால், எமிலியானே அவருடனான உறவை முறித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அய்ல்டன், எமிலியாவை கடத்த திட்டமிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி, மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த எமிலியானேவை வழிமறித்த அய்ல்டன், அவரை காரில் கடத்திச் சென்று தனது வீட்டிற்கு அழைத்து வந்து சிறை வைத்துள்ளார். அங்கு, எமிலியானேவின் கை, கால்கள் மற்றும் கழுத்தில் சங்கிலியால் கட்டி, வாயில் துணியை அடைத்து, மூச்சுவிட முடியாத அளவுக்கு சித்திரவதை செய்துள்ளார்.
ஐந்து நாட்களுக்கு முன்பு எமிலியானே காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அய்ல்டன் எமிலியானேவை காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அய்ல்டனின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அங்கு, எமிலியானே கயிறுகளாலும் சங்கிலிகளாலும் கட்டப்பட்ட நிலையில் மெத்தையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது கைகள், கால்கள் மற்றும் கழுத்து ஆகியவை சங்கிலிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், அவரை சிறைப்பிடித்து வைக்க கைவிலங்குகளும் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எமிலியானே மூச்சுவிட சிரமப்பட்டதாகவும், அவரது அலறல் சத்தம் அக்கம்பக்கத்தினருக்குக் கேட்காமல் தடுப்பதற்காக முகத்தில் முகமூடியும் வாய்க்கட்டும் இடப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட எமிலியானே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் அவரது காதலன் அய்ல்டனை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
