இயக்குனர் இமயம் என்று அன்புடன் அழைக்கப்பட்ட பாரதிராஜா, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 9 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, பின்னர் சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று அவரது சொந்த மண்ணில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது' என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
'துயரத்தின் இந்த வேளையில், அவரது குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி' என்று தனது இரங்கல் செய்தியை பிரதமர் மோடி நிறைவு செய்துள்ளார். பாரதிராஜாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.