பெங்களூரு நகர சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கிரேட்டர் பெங்களூரு ஆணையம் ஒரு புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, இனி வீட்டின் முன் கார் நிறுத்த ஆண்டுக்கு ₹25,000 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பெங்களூரு நகர சாலைகளில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு ஒரு தீர்வாக, விதி 13ன் கீழ், குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் தவிர, மற்ற வாகனங்களை சாலைகளில் இலவசமாக நிறுத்த முடியாது. இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டால், வாகன உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த வரைவு அறிக்கையின்படி, பெங்களூரு நகர சாலைகள் 'ஏ', 'பி', 'சி' என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். 'ஏ' பிரிவு சாலைகளில் கார் நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ₹80, 'பி' பிரிவு சாலைகளில் ₹60, மற்றும் 'சி' பிரிவு சாலைகளில் ₹40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் வாகனங்களை நிறுத்தினால், இந்த கட்டணம் அதிகபட்சமாக ஒன்றரை மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும், பொது சாலைகளுக்கு பதிலாக, வாகன நிறுத்துமிடங்களில் மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, இரு சக்கர வாகனங்களுக்கு ₹1,000 முதல் ₹2,000 வரையிலும், கார்களுக்கு ₹2,000 முதல் ₹4,000 வரையிலும் கட்டணம் விதிக்கப்படும். தினமும் இரவு 8:00 மணி முதல் மறுநாள் காலை 8:00 மணி வரை வாகனங்களை நிறுத்தினால், மாத கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
நகரில் உள்ள காலியான நிலங்களை பொது மக்கள் அல்லது உரிமையாளர்கள் தாமாக முன்வந்து பொது வாகன நிறுத்தங்களாக மாற்றினால், அவர்களுக்கு 35 ஆண்டுகள் வரை அந்த இடத்திற்கான சொத்து வரியில் விலக்கு அளிக்கப்படும் என்றும் இந்த வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொந்தமாக கார் வைத்திருப்போர், தாங்கள் வசிக்கும் வீட்டின் முன் சிறிய கார்களை நிறுத்த ஆண்டுதோறும் ₹15,000, 'செடான்' கார்களுக்கு ₹20,000, மற்றும் எஸ்.யு.வி. கார்களுக்கு ₹25,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வாகனங்கள் நிறுத்தப்படும்போது, மற்ற வாகனங்கள் செல்வதற்கு போதுமான இடவசதி உள்ளதா என்பதை ஜி.பி.ஏ. மார்ஷல்கள் பார்வையிட்டு அறிக்கை தந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
இந்த வரைவு திட்டம் குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அடுத்த 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். பெறப்படும் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கிரேட்டர் பெங்களூரு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகன உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
