மேற்கு வங்கத்தில் ஒரு விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. ரேகா பத்ரா, கால்நடைகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி, பசுக்களின் பிறப்புச் சான்றிதழை கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிங்கல் கஞ்ச் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வான ரேகா பத்ரா, ஒரு கனரக வாகனத்தை வழிமறித்து ஓட்டுநரிடம் இது குறித்து பேசியுள்ளார். '14 வயதுக்கு உட்பட்ட கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டக்கூடாது என முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார். எனவே, பசுக்களின் பிறப்புச் சான்றிதழை நீங்கள் எங்களிடம் காட்ட வேண்டும். இல்லையென்றால், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ் தரப்பிலிருந்தும் பதிலடி வந்துள்ளது. அக்கட்சியின் எம்.எல்.ஏ. குணால் கோஷ் இது குறித்து கூறுகையில், 'இரட்டை எஞ்சின் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில், பசுவிற்கு வழங்கப்பட்ட ஒரு பிறப்புச் சான்றிதழைக் கொண்டு வர முடியுமா என்று மாண்புமிகு எம்.எல்.ஏ.விடம் கேட்டுக்கொள்கிறோம். அது எங்களுக்கு ஆதாரமாக இருக்கும். பாஜகவால் அப்படி ஒரு சான்றிதழைக் காட்ட முடிந்தால், அதற்கு யார் அங்கீகாரம் அளித்துள்ளார் என்பதையும் நாங்கள் சரிபார்க்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விநோத சம்பவம் தற்போது மேற்கு வங்காள அரசியலில் ஒரு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. பாஜகவின் செயல்பாடு மற்றும் திரிணாமூல் காங்கிரஸின் பதில், மாநில அரசியலில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.