தமிழ்நாட்டில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மற்றும் யோகா இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இது இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் கீழ் வரும் கல்லூரிகளில் உள்ள பல்வேறு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கையை உள்ளடக்கியது.
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்திற்கும் நடைபெறும். சித்தா (BSMS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஓமியோபதி (BHMS) மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS) ஆகிய பட்டப்படிப்புகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஒதுக்கீட்டு இடத்திற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
'www.tnayushselection.org' என்ற இணையதளத்தில், பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் / பி.என்.ஒய்.எஸ். மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான உரிய தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையவழியில் மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை ஆயுஷ் மருத்துவப் பட்டப்படிப்புகளான சித்தா (BSMS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS) மற்றும் ஓமியோபதி (BHMS) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசியத் தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2026-ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், முழுமையாகத் தகுதி வரிசை (Merit) அடிப்படையில் மேற்கொள்ளப்படும். யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, மேல்நிலைப் பள்ளி (+2) பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், தகுதி நிபந்தனைகளின்படி, முழுமையாகத் தகுதி வரிசை அடிப்படையில் நடைபெறும்.
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களை 'www.tnayushselection.org' என்ற இணையதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் விரிவாக அறியலாம். விண்ணப்பிக்கும் முன், தகவல் தொகுப்பேட்டை முழுமையாகப் படித்து, சரியான தகவல்களைப் பதிவேற்றவும், தேவையான அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவங்களை பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் ஆகியவற்றை இணையவழி மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய படிப்புகளின் காலம் 5 1/2 ஆண்டுகள் ஆகும். இதற்கான கல்வித் தகுதி 10, +2 (அறிவியல் பாடங்களில் தேர்ச்சி) மற்றும் NEET- 2026 (UG) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்லூரிகள் விவரங்களைப் பொறுத்தவரை, அரசு சித்தா மருத்துவக் கல்லூரிகளில் 160 இடங்களும், அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்களும், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 160 இடங்களும் உள்ளன. மேலும், சுயநிதி சித்தா மருத்துவக் கல்லூரிகளில் 820 இடங்களும், சுயநிதி ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரிகளில் 270 இடங்களும், சுயநிதி ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் 900 இடங்களும், சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 1900 இடங்களும் உள்ளன.
OC, BC, BCM, MBC/DNC பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- ஆகும். SC, SCA & ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பிரிவினருக்கும் கலந்தாய்வுக் கட்டணம் ரூ.1000/- ஆகும். சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்கள், ஒவ்வொரு சிறப்புப் பிரிவிற்கும் ரூ.100/- கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களுடன் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 31.07.2026 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும்.
