திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குறுகிய குகைப் பாதையில் உடல் பருமன் காரணமாக சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆந்திர மாநில பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில், பக்தர்கள் வழிபடுவதற்கு ஒரு சிறிய குகை போன்ற அமைப்பு உள்ளது. இந்த குகையில் மூன்று வாசல்கள் அமைந்துள்ளன. பக்தர்கள் பின் வாசல் வழியாக படுத்தவாறு உள்ளே நுழைந்து, கைகளை ஊன்றியவாறு மெதுவாக நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வர வேண்டும். குகைப் பகுதியிலிருந்து வெளியே வந்தவுடன் நந்தி பகவான் தரிசனம் கிடைக்கும். பக்தர்கள் நந்தியம் பெருமானையும், இடுக்கு பிள்ளையாரையும் தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். தினந்தோறும் ஏராளமான பக்தர்கள், குறிப்பாக கிரிவலம் செல்பவர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து இந்தக் குகைப் பாதையில் நுழைந்து, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில், நேற்று இரவு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிக்குமார் (வயது 36) என்பவர் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வந்துள்ளார். இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு வந்த அவர், வழக்கம்போல் குகை வடிவத்தில் உள்ள கோவில் பகுதிக்குள் படுத்தவாறு நுழைந்துள்ளார். ஆனால், அவருக்கு உடல் எடை அதிகமாக இருந்ததால், குகையின் குறுகிய பாதையில் இருந்து அவரால் வெளியே வர முடியவில்லை. இதனால், அவர் குகைக்குள்ளேயே சிக்கிக்கொண்டார். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த அவரை, அங்கிருந்த சக பக்தர்கள் போராடி குகைக்குள் இருந்து வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணி குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த துயரச் சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி பக்தர் உயிரிழப்பு

Senior Reporter
Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை
