சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) செய்தித் தொடர்பாளராகவும், துணை கொள்கை பரப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வந்த திருநங்கை அப்சரா ரெட்டி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த திடீர் விலகல் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அப்சரா ரெட்டி, அதிமுகவில் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்தார். கடந்த ஜூலை மாதம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அவருக்கு துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்தப் பதவி வகித்து வந்த நிலையில், அவர் திடீரென கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது விலகல் கடிதத்தை எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று (ஆகஸ்ட் 12) அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'மனதில் கனத்த உணர்வுடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எனது விலகலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'அதிமுகவுடனான எனது பயணம் எனக்கு வெறும் அரசியல் பயணம் அல்ல. புரட்சித் தலைவி அம்மா மீது கொண்டிருந்த ஆழ்ந்த மரியாதையும், அன்பும், அவருடைய அரசியல் சிந்தனைகள் மீதான நம்பிக்கையும் என்னை இந்த இயக்கத்துடன் இணைத்தவை. அம்மா, மக்களை முன்னிறுத்திய அரசியலையும், மரியாதை, சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அவருடைய அணுகுமுறையையும் நான் எப்போதும் மதித்து வந்துள்ளேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் என்பது மக்களைப் பிரிப்பதற்காக அல்ல, அவர்களை ஒன்றிணைத்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டும் என்பதே தனது நம்பிக்கை என்றும் அப்சரா ரெட்டி கூறியுள்ளார். தனது அரசியல் பயணத்தில் தனக்கு வழங்கிய நம்பிக்கை, அன்பு, மரியாதை மற்றும் வாய்ப்புகளுக்காக அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். உங்களின் மீதான எனது தனிப்பட்ட மரியாதையும் அன்பும் என்றும் மாறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவு எந்தவித கசப்பினாலும் அல்லது தனிப்பட்ட வருத்தத்தினாலும் எடுக்கப்படவில்லை என்றும், தனது மனசாட்சிக்கும், தான் நம்பும் கொள்கைகளுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார். அதிமுகவில் இருந்த காலம் தனது வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயமாக இருக்கும் என்றும், இந்த இயக்கத்தின் மூலம் கிடைத்த அனுபவங்களையும், பொறுப்புகளையும், நட்புகளையும், மக்களுடன் இணைந்து பணியாற்றிய வாய்ப்புகளையும் தான் என்றும் மதிப்புடன் நினைவுகூர்வதாகக் கூறியுள்ளார்.
தனது அரசியல் பயணம் இனி வேறு ஒரு பாதையில் செல்லலாம் என்றும், ஆனால் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற தனது நோக்கம் மாறாது என்றும் அப்சரா ரெட்டி உறுதிபடக் கூறியுள்ளார். அம்மா அவர்களின் பாதையில், மக்களுக்காக குரல் கொடுப்பதும், தேவையான இடங்களில் பாலமாக இருப்பதும், தைரியத்துடனும் அன்புடனும் மரியாதையுடனும் தொடர்ந்து பணியாற்றுவதும் தனது உறுதியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் முடிவைத் தாண்டியும், தங்களுக்கு இடையேயான தனிப்பட்ட அன்பும் மரியாதையும் என்றும் தொடர வேண்டும் என்று மனதார விரும்புவதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்சரா ரெட்டி அதிமுகவில் இருந்து விலகியிருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக நாம் தமிழர் கட்சியில் இணையப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னதாக சிங்கை ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

