முன்னாள் சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ளும் உங்களுக்கு, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை ஏற்கும் மனப்பக்குவம் ஏன் இல்லாமல் போனது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அப்பாவு பதிவிட்டுள்ளதாவது:
'பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை எளிதாகக் கடந்து செல்வார்கள். அவர்கள் வழியில் வந்த தளபதி மு.க.ஸ்டாலின், 'முட்டாள் முதல்வரே' என்று ஒருவர் விமர்சித்தபோது, 'முட்டாள் இப்படித்தான் பேசுவான்' என்று பொறுமையாகக் கடந்து சென்றார். ஆனால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களோ, சட்டப்பேரவையில் 'உங்கள் அப்பாவை எங்கே காணோம்?' என்று நையாண்டி செய்கிறீர்கள். ஐந்து நிமிடப் பேச்சில், 'முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டுவிட்டேன்' என்று கொக்கரிக்கிறீர்கள். ஆதாரமின்றி 'பார்ட்டி பண்ட்' என்று பேசி ஆனந்தப்படுகிறீர்கள்.
கரூர் பொதுக்கூட்டத்தில், 'ஓடு ஓடு ஓடு' என்று பாடி, 'இனி சட்டமன்ற கதவை பூட்டுவேன்' என்று ஆணவத்துடன் பேசுகிறீர்கள். நீங்கள் என்ன மொழியில் பேசினீர்களோ, அதே மொழியில் அமைச்சர் மார்க்கண்டேயன் பதிலளித்துள்ளார். 'எங்களை சட்டமன்றத்திற்குள் பூட்டி வைத்து ஏதாவது செய்ய நினைத்தால், எங்கள் கை பூ பறிக்கவா செய்யும்?' என்று தற்காப்பு உணர்வுடன் அவர் பேசியுள்ளார்.
'முட்டாள் முதல்வரே' என்று பேசியவர்களுக்கும், தம்பி குடும்பத்தை வீடு புகுந்து தாக்கியவருக்கும், லட்சக்கணக்கான மக்கள் கூடிய மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கும் அமைச்சர் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கும் நீங்கள், உங்கள் கட்சியினருக்கு ஒரு நியாயம்? எதிர்க்கட்சியினருக்கு ஒரு நியாயமா? உதவி கேட்டு வந்த த.வெ.க இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை எம்.எல்.ஏ-வாக உங்கள் கட்சியில் தொடர பெருந்தன்மையுடன் அனுமதித்துள்ளீர்கள்.
உங்களோடு இருப்பவர்களின் குற்றங்களை பொறுத்துக்கொள்ள பழகிய உங்களுக்கு, எதிர்க்கட்சியினரின் விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமல் போனது ஏன்? தலைவர்களின் படங்களை வெறுமனே அலங்கரித்தால் மட்டும் போதாது, அவர்களது பண்பும் வரவேண்டும்' என்று முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

