பாமகவின் அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அவரை புறக்கணிக்க வேண்டும் என்றும் பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக, அதிமுக, தமாக, தமிழக வாழ்வுரிமை கட்சி என அனைத்து கட்சிகளிலிருந்தும் எங்களுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஒரு மாதத்திற்குப் பிறகு ஆடி மாதம் முடிந்ததும், எந்த முடிவாக இருந்தாலும் தெரிவிப்போம். பாமகவின் அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இனி எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்பேன்.
எப்போதும் எனக்கு ராமதாஸ்தான் கடவுள். நேற்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் ராமதாஸ்தான் எனக்கு கடவுள். ஆறு முறை வாய்ப்பு தந்து ஏழாவது முறை எம்.எல்.ஏ ஆக்கியவர் ராமதாஸ். எத்தனையோ சோதனையான சூழலில் உயிரை பணயம் வைத்து அன்புமணியைக் காப்பாற்றினேன். அன்புமணியைக் கண்டு வன்னியர்கள் ஏமாறக்கூடாது. நிறுவனர் ராமதாஸை ஏற்ற பாமகவினர் அன்புமணியை ஏற்கத் தயாராக இல்லை" என்று அவர் கூறினார்.
மேலும், நிறுவனர் ராமதாஸுடன் தான் இருந்ததால், அன்புமணி தன்னை துரோகி, சாக்கடை என்று கூறியதாகவும் அருள் குறிப்பிட்டார். எத்தனையோ சோதனையான சூழலில் உயிரைப் பணயம் வைத்து அன்புமணியைக் காத்ததாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

