தமிழக முதலமைச்சர் பதவிக்கு, முதலமைச்சருடன் இருப்பவர்களே குள்ளநரி கும்பலாக செயல்பட்டு, முதலமைச்சர் விஜய்க்கு தேசிய அரசியல் ஆசை காட்டி அவரை பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
'குறை பிரசவம்' போல் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக-வை பெட்டியில் வைத்து ஆளுநர் காப்பாற்றியதால், காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைத்த விஜய், தற்போது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட பாஜக ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருவது நம்பிக்கை துரோகம் இல்லையா CM sir?
இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி தகுதி இல்லை என்பது போலவும், அடுத்த பிரதமர் விஜய்தான் என்றும் சட்டப்பேரவையில் ஒரு அமைச்சர் பேசியபோது, காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் வெட்கமின்றி மேஜையைத் தட்டி ரசிக்கும் கேவலமான செயலில் ஈடுபட்டதுதான் வேடிக்கை. விஜய்க்கு தேசிய அரசியல் ஆசை காட்டி அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அந்த இடத்தை பிடிக்க உங்களோடு இருக்கும் குள்ளநரி கும்பலின் திட்டத்தை அறிவீர்களா CM Sir?
'அரசன் ஒரு முள் செடியை நட்டால் அமைச்சர்கள் முள் காட்டையே உருவாக்கி விடுவார்கள்' என்ற வட இந்திய பழமொழிக்கு ஏற்ப, பொய்களை உண்மை போல் ரீல்ஸ்களாக்கி நீங்கள் தொடங்கி வைத்த செயல், தற்போது அமைச்சர்கள் முதல் தவெக அடிமட்ட தொண்டர்கள் வரை பரவி, எங்கும் ரீல்ஸ் எதிலும் ரீல்ஸ் என்ற நிலை உருவாகியுள்ளது. சட்டமன்றத்தில் சபாநாயகரால் நீக்கப்பட்ட வீடியோக்களைக் கூட ஃபேக் ஐடி மூலம் ரீல்ஸ் விடும் கேவலமான செயலை செய்து வருகிறீர்களே CM sir!
தவெக ஆட்சியில் தமிழக மக்களுக்கு தனியார் மருத்துவமனையில் நோயாளி இறந்தால் மருத்துவ கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு உடனடி மரண தண்டனை என்றும், கோவில் உண்டியல் வருமானத்தில் கல்விக் கூடம் கட்டி மக்கள் பயனடைந்து வருவது போன்றும் பொய் பிரச்சாரங்களை வட மாநிலங்களில், பல நூறு கோடி ரூபாய் செலவில் இந்தியில் ரீல்ஸ் தயாரித்து மக்களிடையே பிரச்சாரம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தி வரும் தவெகவின் நரித்தனத்தை இந்தியாவே பார்த்து சிரிப்பதுடன், உங்கள் ஃபேக் ஐடி மூலம் பொய் ரீல்ஸ் பரப்புவதை நீதிமன்றம் சென்று தண்டனை வாங்கித்தரவும் மக்கள் தயாராகி வருகின்றனர் CM sir! என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் சபாநாயகர் அப்பாவுவின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சருடன் இருப்பவர்களே அவருக்கு எதிராக செயல்படுவதாக அவர் கூறியிருப்பது, ஆளும் கட்சிக்குள்ளேயே இருக்கும் உட்கட்சி பூசல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.

