மலையாள திரையுலகில் 'பிரேமம்' படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது முன்னாள் காதலர் தன்னை இரண்டு ஆண்டுகளாக மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாகக் கண்ணீருடன் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த துன்புறுத்தல் 'நார்சிசிஸ்டிக் அப்யூஸ்' எனப்படும் உளவியல் ரீதியான பாதிப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது காதல் உறவு முறிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டதாகவும், இந்த விஷயத்தை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவரும் அறிந்திருந்ததாகவும் அனுபமா தெரிவித்துள்ளார். தன்னைச் சுற்றி இருந்தவர்கள் தனது மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த உறவின் ஆரம்ப கட்டத்திலேயே தன்னை முழுமையாக இழக்கத் தொடங்கியதாகவும், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர் துன்புறுத்தியதால் உடல் எடை குறைந்து, வாடி வதங்கியதாகவும் வேதனையுடன் விவரித்துள்ளார்.
மேலும், தனது முன்னாள் காதலர் 'அந்நியன்' படத்தில் வரும் அம்பி மற்றும் ரெமோ கதாபாத்திரங்களைப் போல நடந்துகொண்டதாக அனுபமா பரமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் மிகவும் கொடூரமாக நடந்துகொண்டு, அடுத்த நாள் மன்னிப்புக் கேட்டு, இனி அப்படிச் செய்ய மாட்டேன் என்று குழந்தையைப் போல அழுது கெஞ்சுவாராம். இது தினசரி நிகழ்ந்துகொண்டே இருந்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
காதல் வளரத் தொடங்கியதும், தன்னை அவரது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், மூன்று மாதங்களுக்குள் நிச்சயதார்த்தப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் அனுபமா கூறியுள்ளார். நிச்சயதார்த்த நிகழ்ச்சி எங்கு நடத்தப்பட வேண்டும், எத்தனை பேர் கலந்துகொள்ள வேண்டும், என்னென்ன உணவுகள் பரிமாறப்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த அவசர நிச்சயதார்த்தத்தை தான் நிராகரித்ததால், தன்னை 'பணத்தாசை பிடித்தவள்' என்று அவர்கள் கூறியதாகவும் அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஒருவேளை தான் இந்த நிச்சயதார்த்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால், அது விரைவில் விவாகரத்தில் முடிந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அப்போதும், அவர்கள் கேட்டபோது, தான் இன்னும் சிறிது அவகாசம் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, மஞ்சள் நிறப் புடவை அணிந்து புகைப்படம் பதிவிட்டிருந்தால் தனக்கு ஏராளமான அன்பு கிடைத்திருக்கும் என்றும், அது குறித்து பொதுவெளியில் நிறைய விவாதங்கள் நடந்திருக்கும் என்றும் அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. பலரும் அந்த நடிகர் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நடிகரின் பெயரை குறிப்பிட்டு சாடி வருகின்றனர்.

