கோவையில் நடைபெற்ற 'ஆப்ரேஷன் சிந்தூர்' புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். இந்நூல் ராணுவ வீரர்களின் தியாகத்தையும், கடின உழைப்பையும் வெளிப்படுத்துவதாகவும், இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு மொத்தம் 408 மில்லியன் டாலர் (சுமார் 3,887 கோடி ரூபாய்) செலவிடப்பட்டதாக ஆய்வறிக்கை கூறுவதாகவும், ஆனால் இன்றைய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.1 டிரில்லியன் டாலர் (சுமார் 3 கோடியே 90 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய்) என்றும் அண்ணாமலை தெரிவித்தார். இந்தியாவின் பாதுகாப்பு துறை பட்ஜெட்டில் 0.47 சதவீதம் மட்டுமே 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீராக இருந்தால் மட்டுமே, அதன் பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான அனைத்தையும் வழங்க முடியும் என்றும், தேவைக்கு அதிகமாகவும் வழங்க முடியும் என்றும் அண்ணாமலை கூறினார். எந்தவொரு பெரிய யுத்தத்தையும் எதிர்கொள்ளும் அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இதனிடையே, பாகிஸ்தானின் மொத்த பொருளாதார வளர்ச்சி வெறும் 375 பில்லியன் டாலர் (சுமார் 35 லட்சத்து 72 ஆயிரத்து 904 கோடி ரூபாய்) மட்டுமே என்றும், இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பை விட குறைவானது என்றும் அண்ணாமலை ஒப்பிட்டார். இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள பொருளாதார இடைவெளியை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் இன்று ஒரு தனி நாடாக செயல்படவில்லை என்றும், 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள் சீனாவிலிருந்தும், ட்ரோன்கள் துருக்கியிலிருந்தும் வாங்கப்பட்டதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார். துருக்கி மற்றும் சீனா தங்களது தயாரிப்புகள் தாக்குப்பிடிக்கிறதா என்பதை சோதிக்க பாகிஸ்தானை ஒரு சோதனைக்களமாக பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுக்கு இந்தியா ஏற்படுத்திய சேதம் இன்றைய மதிப்பில் சுமார் 1.5 பில்லியன் டாலர் (சுமார் 14,500 கோடி ரூபாய்) என்றும், இது பாகிஸ்தானின் உள்கட்டமைப்பு சேதங்கள் அல்லது சேதமடைந்த தளவாடங்களுக்கு பதிலாக புதிதாக வாங்கியிருக்கக்கூடிய செலவுகளாக இருக்கலாம் என்றும் அண்ணாமலை மதிப்பிட்டார்.
மாணவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது என்றும், ராணுவ வீரர்களின் கடின உழைப்பை வெளிப்படுத்தும் இந்த நூல், இளைஞர்களிடையே இந்திய ராணுவத்தில் இணைந்து பாரத தாய்க்கு சேவை செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கும் என நம்புவதாகவும் அண்ணாமலை தனது உரையை நிறைவு செய்தார்.

