கர்நாடகத்தில் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக வலம் வந்து, பின்னர் பா.ஜ.க.வில் இணைந்து தமிழக தலைவரான அண்ணாமலையின் அரசியல் பயணம் பலரையும் கவர்ந்தது. அவர் தமிழக பா.ஜ.க. தலைவரான பிறகுதான் அக்கட்சி வளர்ச்சி கண்டதாக பரவலாகக் கருதப்படுகிறது. தேசிய கட்சிகள் தமிழகப் பிரச்சினைகளில் அதிகம் தலையிடுவதில்லை என்ற சூழலில், அண்ணாமலை தமிழக ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சித்தது இளைஞர்கள் மத்தியில் அவருக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்தது.
2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க. தோல்வியைச் சந்தித்தது. இதற்கு அ.தி.மு.க.வினரே, பா.ஜ.க. கூட்டணியே காரணம் என்று குற்றம் சாட்டினர். இதற்கு அண்ணாமலை அளித்த பதிலடியால், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. தோல்வியடைந்தாலும், பா.ஜ.க.வின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்தது. காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி 11% வாக்குகள் பெற்றது அண்ணாமலையின் அதிரடி பேச்சுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
ஆனால், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையை பா.ஜ.க. தொடங்கியபோது, அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்தார். அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகே கூட்டணிக்கு அ.தி.மு.க. சம்மதித்தது. இதனால், அண்ணாமலை பா.ஜ.க.வில் சற்றுப் பின்னடைவைச் சந்தித்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முதல் தேர்தலை எதிர்கொள்ளத் தயாரானது. விஜய் மக்களை சந்தித்தபோது எழுந்த கூட்டம், ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல் தேர்தலிலேயே த.வெ.க. கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைத்தது.
தற்போது, புதிய முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், 717 மதுக்கடைகள் மூடல், 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், ரூ.50 ஆயிரம் வரையிலான சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி அளிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், பா.ஜ.க.வில் இருந்து விலகி, அண்ணாமலை புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இளைஞர்களை மையப்படுத்திய இந்த இயக்கத்தில் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் இணையும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, தேர்ச்சி பெறுபவர்களுக்கே பொறுப்பு வழங்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையாகப் பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையின் இந்த அரசியல் வருகை, த.வெ.க.வின் வளர்ச்சியைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக அண்ணாமலை கூறியிருப்பதால், அடுத்த தேர்தலில் விஜய் – அண்ணாமலை இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்ற கேள்வியும் இப்போதே எழுந்துள்ளது. த.வெ.க. அரசின் நகர்வுகளும், அண்ணாமலையின் அடுத்த கட்ட முயற்சிகளுமே யார் முன்னுக்கு வருவார்கள் என்பதைத் தீர்மானிக்கும்.