சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முக்கிய செயற்குழு கூட்டத்தில், கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, கழக நிர்வாகிகளுக்கான வயது வரம்புகள் மற்றும் பொறுப்பு வகிக்கும் காலக்கெடு ஆகியவற்றில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் கழகத்தின் கட்டமைப்பில் புதிய ரத்தத்தைப் பாய்ச்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நபர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே கிளைக்கழகச் செயலாளராகப் பொறுப்பு வகிக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் ஒரு முக்கிய முடிவாகும்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய முக்கிய மாநகரங்களிலும், பிற மாநகராட்சிகளிலும் சூழலுக்கு ஏற்ப வட்டக்கழகங்கள் வலிமைப்படுத்தப்பட்டு, கிளைக்கழகங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த கிளைக்கழகச் செயலாளர்களுக்கும் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களும் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.
மாநகரங்களில் உள்ள வட்டக்கழகங்கள் குறித்த புதிய வரையறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் ஒரு வட்டக்கழகம் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டிருக்கும். பிற மாநகராட்சிகளில் இது 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டிருக்கும். மாநகர, நகர, பேரூராட்சி வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 ஆகவும், இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்ற நிபந்தனையும் தொடர்கிறது.
பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 ஆகவும், இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களுக்கும் அதிகபட்ச வயது 60 மற்றும் இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்கும் விதி பொருந்தும்.
நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 ஆகவும், இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட்டு, ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருந்தால், அது அதே வருவாய் மாவட்டத்தில் உள்ள பொருத்தமான கழக மாவட்டத்துடன் இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவரும் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கழகத் தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம், நகரம், பகுதி, வட்டக்கழகங்கள் பிரிக்கப்பட வேண்டும். தலைமைக்கழகப் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெற்று தலைமைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

