கோவில்பட்டி நகராட்சிக்கு அருகில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இட்லிகள் தனியார் சிற்றுண்டி கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் இட்லிகள், வெளியில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லிகள், அங்கு வரும் மக்களுக்கு வழங்கப்படாமல், மொத்தமாக சிற்றுண்டி நடத்துபவர்களுக்கு விற்பனை செய்யப்படும் அவல நிலை நீடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து கேட்டால், அதிகாரிகள் தான் விற்பனை செய்ய சொன்னதாக ஊழியர்கள் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலை வேளையில் அரை மணி நேரத்திலேயே இட்லி தீர்ந்துவிட்டதாக ஊழியர்கள் கூறுவதாகவும், ஆனால் அதேநேரம் பள்ளிக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஐந்து இட்லி கேட்டால் கூட தர மறுக்கும் ஊழியர்கள், 60 இட்லி, 80 இட்லி என மொத்தமாக விற்பனை செய்யும் அவல நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அரசு சார்பில் குறைந்த விலையில் தரப்படும் உணவுப் பொருட்கள், தனியார் லாபத்திற்காக தவறாக பயன்படுத்தப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.