டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாகவே அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக நேரிட்டதாக அவர் கூறினார்.
புதிதாக கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரகலாத் ஜோஷி ஒரு விசித்திரமான நபர் என்றும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களை கல்வி அமைச்சராக நியமிப்பது நாட்டுக்கு என்ன செய்தியை சொல்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பா.ஜனதாவில் ரவுடிகள்தான் நிரம்பியுள்ளதாகவும், ராம் ரகீம் போன்ற பாலியல் குற்றவாளிகள் இந்த ஆட்சியில் பரோலில் வெளியே வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த அரசு ரவுடிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் ஆதரவாக செயல்படுவதாக அவர் விமர்சித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள கோரிக்கையை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், அமித் ஷா கண்டிப்பாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அபிஜீத் திப்கே வலியுறுத்தினார். கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தாக்குதலுக்கு அமித் ஷாவை தவிர வேறு யாரும் உத்தரவிட்டிருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
தங்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக பரவும் வதந்திகள் உண்மையாக இருந்தால், அது அமித் ஷாவின் தோல்வியையே காட்டும் என்றும், வெளிநாட்டில் இருந்து இயங்கும் ஒரு இயக்கத்தை கூட கண்டுபிடிக்க முடியாவிட்டால் அவர் என்ன சாணக்கியர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
டெல்லி போலீசார் கடந்த 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் அதிகாலையிலேயே மாணவர்கள் போராட்டம் நடந்த இடத்திற்கு கற்கள் நிரம்பிய லாரிகளையும், உடைந்த ஒரு வேனையும் கொண்டு வந்து நிறுத்தியதாக அவர் தெரிவித்தார். மாணவர்கள் கல்வீசி வன்முறையில் ஈடுபட்டதாக பழிபோட டெல்லி போலீசாரும், பா.ஜனதா குண்டர்களும் சேர்ந்து ஒரு சதித்திட்டம் தீட்டியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை நேரில் பார்த்ததாகவும், சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் கூறினார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய இளைய தலைமுறையினர் நாட்டின் கலாசாரத்தை சீரழித்துவிட்டதாக யோகா குரு பாபா ராம்தேவ் விமர்சித்தது குறித்து பேசிய அபிஜீத் திப்கே, மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை ஏந்தி, சட்டப்பூர்வமாக தங்கள் உரிமைகளுக்காக போராடுவது கலாசாரத்தை சீரழிப்பதாகாது என்று கூறினார். பாபா ராம்தேவ் முதலில் அவரது 'பதஞ்சலி' நிறுவன வியாபாரத்தை கவனிக்கட்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் அந்த நிறுவனத்தை கடுமையாக எச்சரித்ததை அவர் மறந்துவிடக்கூடாது என்றும், இல்லையெனில் வியாபாரம் படுத்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

