சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுவதிலும் பெரும் சிக்கல் நிலவுகிறது.
இந்த நெருக்கடி அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. ஸ்பிரிட் ஏர் லைன்ஸ் போன்ற பல ஆண்டு பாரம்பரியம் கொண்ட நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டன. மேலும் பல எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கிடைக்காமல் திணறி வந்தன.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அமெரிக்க அரசாங்கம் தனது போர் கால எண்ணெய் இருப்பில் இருந்து 5.33 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை 9 முக்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கு கடனாக வழங்கியுள்ளது. எக்ஸான் மொபில், மராத்தான் பெட்ரோலியம் மற்றும் டிராபிகுரா உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும். குறிப்பாக, டிராபிகுரா நிறுவனம் மட்டும் சுமார் 1.3 கோடி பீப்பாய்களைப் பெற்றுள்ளது.
இந்த கச்சா எண்ணெயை கடனாகப் பெற்ற நிறுவனங்கள், 2029 ஆம் ஆண்டுக்குள் வட்டியுடன் (24% கூடுதல் எண்ணெய்) திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க அரசு நிபந்தனை விதித்துள்ளது. இது சர்வதேச எண்ணெய் சந்தையில் ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.