ரூ.1 கோடி வழங்கி அரசு பள்ளிக்கு உதவிய அக்ஷய் குமார்: குவியும் பாராட்டு

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியை மேம்படுத்துவதற்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அவரது இந்த செயல் சமூக வலைதளங்களில் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, எல்லைப் பாதுகாப்புப் படையின் அழைப்பின் பேரில் காஷ்மீர் எல்லைப் பகுதிக்கு நடிகர் அக்ஷய் குமார் சென்றிருந்தார். அங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, குரேஸ் பள்ளத்தாக்கின் நெரோ துலைல் கிராமத்திற்குச் சென்ற அவர், அங்குள்ள அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, மாணவர்களின் கல்வித் தேவைகளையும் பள்ளியின் நிலையையும் கண்ட அவர், உடனடியாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்.

அக்ஷய் குமார் வழங்கிய அந்த நிதியுதவியைக் கொண்டு, பள்ளியின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய வகுப்பறைகள், கணினி ஆய்வகம், நூலகம் மற்றும் ஆசிரியர்களுக்கான அலுவலக அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இந்த புதிய பள்ளி கட்டிடத்திற்கு, நடிகர் தனது மறைந்த தந்தை ஹரி ஓம் பாட்டியாவின் நினைவாக ‘ஹரி ஓம் பாட்டியா கல்வி வளாகம்’ என்று பெயரிட்டுள்ளார்.

நடிகர் அக்ஷய் குமாரின் இந்த மனிதநேயச் செயலை பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். கல்விக்காக அவர் செய்துள்ள இந்த உதவி பலராலும் நல்லெண்ணச் செயலாகப் பார்க்கப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version