கிரிக்கெட்: அனைத்து ஃபார்மட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் ரஹானே!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரஹானே.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனும், மூத்த பேட்ஸ்மேனுமான அஜின்கியா ரஹானே, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது 38 வயதாகும் ரஹானே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இந்த தகவலை உணர்வுபூர்வமாக பகிர்ந்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ரஹானே, 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்திய அணிக்காக அவர் மொத்தம் 85 டெஸ்ட் போட்டிகள், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடியதே அவரது கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது. சமீபத்தில் நடைபெற்ற 2026 மும்பை டி20 லீக் தொடரில் நார்த் மும்பை பாந்தர்ஸ் அணியின் கேப்டனாக விளையாடியதே அவரது கடைசி கிரிக்கெட் போட்டியாகும்.

இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக வலம் வந்த ரஹானே, தனது 85 டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் உட்பட மொத்தம் 5077 ரன்களை 38.46 சராசரியுடன் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 24 அரைசதங்களுடன் 2962 ரன்களையும், 20 சர்வதேச டி20 போட்டிகளில் 375 ரன்களையும் எடுத்துள்ளார்.

தனது ஓய்வு அறிவிப்பு வீடியோவில், ரஹானே நெகிழ்ச்சியுடன் பேசினார். 'வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு. அதை மதித்து நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். டோம்பிவிலியில் இருந்து ரயிலில் பயணித்து கிரிக்கெட் பழகிய சிறுவன் முதல், இந்திய தொப்பியை அணிந்தது வரை எல்லாவற்றையும் என் நாட்டிற்காகவும் அணிக்காகவும் நேர்மையாகச் செய்தேன்' என்று அவர் குறிப்பிட்டார்.

'இந்திய கிரிக்கெட்டின் கடந்த 20 ஆண்டுகால வளர்ச்சியில் நானும் ஒரு பகுதியாக இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கவும், அவர்களுக்கு வழிகாட்டவும் தொடர்ந்து கிரிக்கெட்டுடன் இணைந்திருப்பேன்' என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ), சக வீரர்கள், ஐபிஎல் நிர்வாகங்கள் மற்றும் தனது மனைவி ராதிகா உட்பட குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை ரஹானே தெரிவித்துக் கொண்டார். 'இந்திய டெஸ்ட் தொப்பி எண் 278 விடைபெறுகிறது' என்று அவர் உருக்கமாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரஹானேவின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது சிறப்பான ஆட்டத்திறனுக்காகவும், இந்திய அணிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரஹானேவின் எதிர்கால முயற்சிகளுக்கு பலரும் தங்கள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version