இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 116 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன்கள் எடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று 288-2 என்ற முதல் இன்னிங்ஸ் ஸ்கோருடன் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி, 172 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இன்றைய ஆட்டத்தில் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்களிலும் வானிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காலே மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாம் நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அக்கியூவெதர் கணிப்பின்படி, மூன்றாம் நாள் காலையில் காலேயின் வானிலை பெரும்பாலும் மேகமூட்டத்துடனும், அதிக ஈரப்பதத்துடனும் காணப்படும். மேலும் சில மழைப்பொழிவும் எதிர்பார்க்கப்படுகிறது. இக்காலத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 60 சதவீதமாகவும், மேகமூட்டம் 79 சதவீதமாகவும், ஈரப்பதத்தின் அளவு 84 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
மதிய நேர வானிலையைப் பொறுத்தவரை, வெப்பநிலை சுமார் 31 டிகிரி செல்சியஸாக இருக்கும் அதே வேளையில், வானிலை பெரும்பாலும் மேகமூட்டத்துடனும் ஈரப்பதத்துடனும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு 57 சதவீதமாகவும், மேகமூட்டம் 76 சதவீதமாகவும், ஈரப்பதத்தின் அளவு 78 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
மூன்றாம் நாள் மாலை நேர வானிலையில் லேசான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதுடன், வானிலை பெரும்பாலும் மேகமூட்டத்துடனும் ஈரப்பதத்துடனும் நீடிக்கலாம். அப்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு 59 சதவீதமாகவும், மேகமூட்டம் 76 சதவீதமாகவும், ஈரப்பதத்தின் அளவு 89 சதவீதமாகவும் இருக்கும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட கணிப்பில், 3வது நாளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இலங்கை அணி 150 ரன்களில் சுருண்டால் மட்டுமே போட்டியில் முடிவு கிடைக்கும். இல்லையேனில் ஆட்டம் சமனில் முடிவடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் இரண்டு நாட்களிலும் வானிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், மூன்றாம் நாளிலும் மழை தொடர்ந்தால், அது ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக அமையும். இந்திய அணி வலுவான நிலையில் இருந்தாலும், மழை குறுக்கிட்டால் சமனில் முடிவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
இந்தியா 460 ரன்கள் குவித்துள்ள நிலையில், இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் எவ்வாறு அமையும் என்பதை பொறுத்தே போட்டியின் அடுத்த கட்ட நகர்வுகள் அமையும். மழை பெய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், ரசிகர்கள் ஆட்டம் சமனில் முடியுமா அல்லது இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

