இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், அணியின் தற்போதைய நிலை குறித்து இந்திய வீரர் அஜின்கியா ரஹானே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினர் மூத்த வீரர்களுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டில், இந்திய டெஸ்ட் அணி நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் 0-3 என்ற கணக்கிலும், சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 0-2 என்ற கணக்கிலும் படுதோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், புஜாரா போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ரஹானே, 'ஒரு டெஸ்ட் அணிக்கு 7 முதல் 8 மூத்த வீரர்களின் அனுபவமும், 2 அல்லது 3 இளம் வீரர்களின் ஆற்றலும் அவசியம். ஆனால் தற்போது இந்திய அணியில் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் புதியவர்களாகவே உள்ளனர். அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களே அணியில் இல்லை. இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல' என்று தனது கருத்தை பதிவு செய்தார்.
பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினரை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய ரஹானே, 'டெஸ்ட் கிரிக்கெட் அழியாமல் இருக்க வேண்டும் என நாம் அனைவரும் விரும்புகிறோம். கடந்த 2-3 ஆண்டுகளாக நான் கவனித்தவரை, மூத்த வீரர்களைத் தக்கவைத்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்திய அணியில் உள்ள அனைத்து மூத்த வீரர்களும் ஒரே நேரத்தில் அணியை விட்டு வெளியேறியதே தற்போதைய மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது' என்று அவர் கூறினார்.
மேலும், டெஸ்ட் போட்டியின் சவால்கள் குறித்துப் பேசிய ரஹானே, 'கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் வீட்டில் அமர்ந்து இந்திய அணி சொந்த மண்ணிலேயே போட்டிகளைத் தோற்பதைப் பார்த்து வருகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மன வலிமையும், சவாலான சூழலை எதிர்கொள்ளும் திறனும் மிகவும் முக்கியம். கடினமான செஷன்களை பொறுமையாகக் கடந்து விளையாட வேண்டும். நான் எந்த அணியின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் தற்போதைய அணிகளில் அந்தப் பொறுமை இல்லை' என்று குறிப்பிட்டார்.
இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய நிலைக்கு மூத்த வீரர்களின் அனுபவமின்மையே காரணம் என ரஹானே சுட்டிக்காட்டியுள்ள கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவினரும், பயிற்சியாளரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் அதே வேளையில், அனுபவம் வாய்ந்த வீரர்களின் பங்களிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய டெஸ்ட் அணி எதிர்காலங்களில் சிறப்பாக செயல்பட, அனுபவம் மற்றும் இளமையின் சரியான கலவை கொண்ட அணி அமைய வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விவகாரத்தில் தேர்வுக்குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
