அதிமுகவில் இனி பிரிவில்லை: எஃகு கோட்டையை அசைக்க முடியாது – ஐடி விங் ட்வீட்

கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் உருவான அதிமுகவின் 'எஃகு கோட்டை'யை இனி யாரும் அசைக்க முடியாது என்றும், இனி கட்சிக்குள் பிரிவினைகள் இல்லை என்றும், இரட்டை இலை சின்னம் மீண்டும் வெற்றி வாகை சூடுவதே ஒரே இலக்கு என்றும் அதிமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில், 'எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும்' என ஜெயலலிதா கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது.

இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி யாருக்கும் வழியில்லை என்றும், நாளை நமதே, தமிழ்நாடும் நமதே என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். அதே சமயம், 22 எம்எல்ஏ.க்கள் பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக வேலுமணியை நியமிக்க 25 எம்எல்ஏ.க்களும், பழனிசாமியை நியமிக்க 22 எம்எல்ஏ.க்களும் தனித்தனியாக சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து, பழனிசாமி அந்த 25 எம்எல்ஏ.க்களின் கட்சிப் பதவியைப் பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அவர் தயாரானார்.

இந்தச் சூழலில், வேலுமணி அணியில் இருந்த 4 எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், நேற்று வேலுமணி அணியைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன், அருண்மொழித் தேவன், ஹரி, தங்கமணி ஆகியோர் பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் விதமாக, அதிமுக ஐடி விங் இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து அதிமுக தலைமை இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version