சென்னையில் இருந்து ஆக்ரா சென்ற ரயிலில் துர்நாற்றம்: சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் மீட்பு!

ஆக்ரா ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் மீட்பு

சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கிச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆகஸ்ட் 5ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா ரயில் நிலையத்தில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. பொதுப்பெட்டியில் இருந்து வந்த இந்த துர்நாற்றத்தை அடுத்து, சந்தேகத்திற்கிடமான முறையில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத மனித உடல் பாகங்கள் அதில் இருந்ததை கண்டு ரயில்வே போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஆக்ரா போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். சடலம் தொடர்பான தடயங்களை ஆராய்ந்ததில், இந்த சூட்கேஸ் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனால், உத்தரப் பிரதேச காவல்துறையினர் தமிழக ரயில்வே போலீசாரின் உதவியை நாடினர்.

தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 350க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை போலீசார் பல மணி நேரம் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் சிவப்பு நிற சூட்கேஸுடன் வந்த ஒரு ஆணும், பெண்ணும் அதனை ஆக்ரா செல்லும் ரயிலில் வைத்துவிட்டு, சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் ஏறிச் சென்றது பதிவாகி இருந்தது.

இதனையடுத்து, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. ரயில் நிலையத்திற்குள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சூட்கேஸுடன் வந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கு சென்றார்கள் என்பதை கண்டறியும் முயற்சியில், ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி ஆட்டோவில் கூடுவாஞ்சேரி மசூதி தெரு பகுதிக்குச் சென்றதற்கான காட்சிகளும் போலீசாருக்குக் கிடைத்தன.

அந்த ஆட்டோவின் தடத்தைப் பின்தொடர்ந்த போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டை அடையாளம் கண்டு அங்கு சென்றனர். ஆனால், வீடு பூட்டப்பட்டிருந்ததால், போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர். வீட்டுக்குள் சென்றபோது, கொலை நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. கொலைக்குப் பிறகு உடலை மறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். குறிப்பாக, உடலை துண்டித்து, எலும்புகளை தனியாகப் பிரித்து சூட்கேஸில் அடைத்து ரயிலில் ஆக்ராவுக்கு அனுப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், மீதமிருந்த உடல் பாகங்களை அழித்து, தடயங்களை மறைப்பதற்காக பெரிய பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் தலை இதுவரை கிடைக்காததால், அது தொடர்பாகவும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், அந்த வீட்டில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 3 பேர் தங்கி இருந்துள்ளனர். அவர்களில் ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து மற்றொரு பெண்ணை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சடலமாக மீட்கப்பட்ட பெண், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா என்பதும், அவர் தாம்பரம் அருகேயுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் மகன், தாம்பரம் பகுதியில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருவது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்ற போலீசார், அவரது தாயார் தொடர்பான விவரங்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடய நிபுணர்களைக் கொண்டும் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய இருவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், கொலை செய்தவர்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருந்ததா? அல்லது நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version